இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம்மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.
கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.
பிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்தஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.
பிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை,சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.
மொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது. ஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட "கியூபிசக் குழுமம்" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.
பாப்லோ பிக்காசோ
பாப்லோ பிக்காசோ (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) எசுப்பானியாநாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.அமைதிச்சின்னமான புறாவையும்,ஆலிவ் இலைகளையும்பிரபலப் படுத்தியவர் இவரே ஆகும்.
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக்காலப்பகுதி (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின்இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள்,பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.